சென்னையில் மழை, வெள்ளம் பாதித்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழக அரசு கோரிய நிதியை தாமதமின்றி மத்திய அரசு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக, கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழை, அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பேரிடர் நிகழ்ந்து இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துவிட்டது. ஆனால், மழை, வெள்ள பாதிப்புகளை சரி செய்வதற்காக தமிழக அரசின் சார்பில் கோரப்பட்ட நிதி மத்திய அரசால் இன்று வரை வழங்கப்படாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.