
சென்னை: முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தீர்ப்பு.. அமைச்சர் கருத்து
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசுப் பணிகளில் இருக்கும் மருத்துவர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் வந்திடாத நிலையில், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து மிக விரைவில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் வந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் சட்டத்துறை வல்லுநர்களுடன் பேசவுள்ளனர். தமிழகத்தின் உரிமைகள் எந்த இடத்திலும் பாதிக்கக்கூடாது. குறிப்பாக இந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசுப் பணிகளில் இருக்கும் மருத்துவர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் வந்திடாத நிலையில், என்னென்ன மாதிரியான கோரிக்கைகளை வலியுறுத்துவது என்பதெல்லாம் விவாதித்து பின்னர், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். இந்தாண்டு சேர்க்கைக்கு இது பொருந்தாது என்று கூறியுள்ளனர். அடுத்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆனதுதான் இந்த தீர்ப்பு. அதற்குள் சீராய்வு மனு தாக்கல் செய்து அடுத்த ஆண்டிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் சட்ட வல்லுநர்களுடன் கலந்துபேசி செய்யப்படும் என்று அவர் கூறினார்.