திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ், மாணவர்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 742 மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். 1,480 மனுக்களுக்கு தீர்வு: புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்ற க. தர்ப்பகராஜ், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது 30 நாள்களுக்குள் நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்று அனைத்துத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, கடந்த ஒரு வாரத்தில் 1,480 மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெறப்படும் மனுக்கள் மீது 30 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. இராமபிரதீபன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மைத் துறை நல அலுவலர் சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.