எட்டையபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றுகொண்டிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் போஸ்ட் மாஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள எத்திலப்பன் நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் சிவகுமார் (45) எட்டையபுரம் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு பணி முடிந்து பேரிலோவன்பட்டியில் உள்ள தனது வீட்டிற்குச் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
இதனிடையே எட்டையபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சிந்தலக்கரை அருகே குமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் கைலாஷ் (31) என்பவர் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கோயம்புத்தூருக்கு இரும்பு பொருட்களை டாரஸ் லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த நிலையில் லாரி திடீரென பழுதாகி சாலையில் நின்றது. பழுதாகி நின்றுகொண்டிருந்த லாரி மீது போஸ்ட் மாஸ்டர் சிவகுமாரின் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து எட்டையபுரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சிவகுமாரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.