ஆசிரியர் வீட்டில் 68 பவுன் நகை கொள்ளை: 2 பேர் கைது!

579பார்த்தது
ஆசிரியர் வீட்டில் 68 பவுன் நகை கொள்ளை: 2 பேர் கைது!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுபா நகர் பிள்ளையார் கோவில் தெருவில் குடியிருப்பவர் அப்பாசாமி மகன் சதீஷ்குமார் (43). இவர் திருமங்கலம் அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி இவரது வீட்டில் பூட்டை உடைத்து 68 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பாக ஆசிரியர் சதீஷ்குமார், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மதுரையில் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டதாக கிருஷ்ணாபுரம் காலனி 8-வது தெருவை சேர்ந்த செல்வம் மகன் வைரமணி (25), மதுரை மாவட்டம் உத்தங்குடி வளர் நகர் அம்பலகாரன் பட்டியை சேர்ந்த ஜீவானந்தம் மகன் கார்த்திக் (35) ஆகியோரை மதுரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் வாலிபர்கள் 2 பேரும் கோவில்பட்டி சுபா நகரில் ஆசிரியர் வீட்டில் 68 பவுன் நகையை கொள்ளையடித்ததாக கூறினார்கள். இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட் மூலம் வாலிபர்கள் வைரமணி, கார்த்திக் ஆகிய இருவரையும் கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தங்க நகைகள் மீட்கப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

தொடர்புடைய செய்தி