கள்ள நோட்டு வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை!

67பார்த்தது
கள்ள நோட்டு வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை!
கோவில்பட்டியில் கள்ள நோட்டு வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவில்பட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஒரு பங்களாவில் கடந்த 2000-ம் ஆண்டு கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுவதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் தூத்துக்குடியை சேர்ந்த மூர்த்தி என்ற குருமூர்த்தி (65) மற்றும் ரமேஷ், நித்தியதரன், ஜெயக்குமார், மணி ஆகியோர் கள்ள நோட்டுகள் அடித்து புழக்கத்தில் விடுவது தெரியவந்தது.

இதுதொடர்பாக குருமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த கள்ள நோட்டுகள் 1 லட்சத்து 63 ஆயிரத்து 790-ஐயும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குருமூர்த்தி தவிர மற்ற அனைவரும் இறந்துவிட்டனர்.

வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் விசாரித்து குற்றச்சாட்டப்பட்ட குருமூர்த்திக்கு 2 பிரிவுகளில் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சம்பத்குமார் ஆஜரானார்.

தொடர்புடைய செய்தி