இருசக்கர வாகனத்தில் சென்று விபத்தில் சிக்கிய இளம்பெண்ணுக்கு உதவி செய்வதாக நடித்து தங்க நகைகளை இருவர் திருடியுள்ளனர். கேரளாவின் ஆலப்புழாவில் இச்சம்பவம் சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் நடந்துள்ளது. ஹரிபாடில் உள்ள என்டிபிசி சாலையில் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் 23 வயதான ஆர்யா என்பவர், வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர் சென்ற ஸ்கூட்டர் மீது பின்னால் வந்த மற்றொரு ஸ்கூட்டர் மோதியது.
ஸ்கூட்டரில் வந்த இருவர் விபத்துக்குப் பிறகு உதவி செய்வது போல் நடித்துள்ளனர். ஆனால், இளம்பெண்ணுக்கு உதவாமல், நகைகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இரண்டு மோதிரங்கள் மற்றும் ஒரு வளையல் உள்ளிட்ட நகைகளை வலுக்கட்டாயமாக பறித்துச் சென்றதாக இளம்பெண் தெரிவித்தார். சம்பவம் குறித்து கரேலகுளங்கரா போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.