தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா மேட்டூர் வந்தார். அணையின் வலது கரை, இடது கரை, ஆய்வு சுரங்கம் உள்பட பல்வேறு முக்கிய பகுதிகளை ஆய்வு செய்தார். அணையின் நீர் இருப்பு மற்றும் வெளியேற்றும் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: - ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு போதுமான தண்ணீர் அணையில் உள்ளதா என்பதை குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக வந்துள்ளேன்.
இந்த ஆண்டும் ஜூன் 12-ந் தேதி அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. தமிழக முதல்வர் மேட்டூருக்கு வந்து அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி பணிகளுக்கு தேவையான நிதியை தமிழக அரசு வழங்கி வருகிறது. தற்போது ரூ. 20 கோடி செலவில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ஜனவரி மாதம் ரூ. 20 கோடியில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் தண்ணீர் திறப்பதற்கு முன்னதாக எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.