சேலம்: ஆத்தூர் அருகே மல்லியகரை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் செல்வராஜ் (57). இவர் நேற்று (ஜூன் 12) முன்தினம் நள்ளிரவு மல்லியகரை அருகே பெட்ரோல் பங்கில் டூவீலருக்கு பெட்ரோல் நிரப்ப சென்றார். அப்போது அங்கு சிலர் ஊழியர்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதை பார்த்த எஸ்எஸ்ஐ செல்வராஜ் அந்த நபர்களை தட்டிக்கேட்டு அங்கிருந்து செல்லுமாறு கூறினார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் எஸ்எஸ்ஐ செல்வராஜை அடித்து உதைத்தனர். உடனே பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அந்த நபர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து போலீசார் அந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் காடையாம்பட்டி நாச்சினம்பட்டி காலனியைச் சேர்ந்த பிரபு (29), சிவசங்கர் (24), தீவட்டிப்பட்டியை சேர்ந்த ஜெயகண்ணன் (29) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். காயமடைந்த எஸ்எஸ்ஐ செல்வராஜ் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.