கல்விக்கடன் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு

10744பார்த்தது
கல்விக்கடன் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மாணவர்களின் புத்தக கட்டணம், தங்கும் விடுதி கட்டணம், உணவு கட்டணம், டியூஷன் கட்டணம் போன்று பல்வேறு கல்வி கட்டணங்களை செலுத்த ஏதுவாக ரூ. 1 லட்சமாக வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கல்விக்கடன் பெறும் மாணவர்கள் கல்வி பயிலும் காலம் முடிந்து 6 மாதங்கள் கழித்து வரும் 5 வருடங்களுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும். இக்கல்விக் கடனுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 10% ஆகும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமின்றி, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர்களுக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், நிறுவனங்களை மாணவர்கள் அணுகி உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து, கல்விக் கடனை பெற்று மாணவர்கள் தங்களின் கல்விக் கனவை நனவாக்கிக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி