கோர விபத்து - பெண் அதிகாரி, மகன் சாவு

3985பார்த்தது
கோர விபத்து - பெண் அதிகாரி, மகன் சாவு
சேலம் மாவட்டம், மேட்டூர் சேலம் கேம்ப் காமராஜ் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 53). இவர் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி தமிழரசி (53). இவர் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் தொழிலாளர் நல அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். இவர்களில் மூத்த மகன் புகழொளி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி. இ. என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லாத உறவினரை சேலம் அகழைத்து வந்து ஆஸ்பத்திரியில் ேசர்த்தனர். பின்னர் தாய்-மகன் இருவரும் சேலத்தில் இருந்து மேட்டூருக்கு காரில் திரும்பி வந்தனர். காரை புகழொளி ஓட்டி வந்தார். மேச்சேரியை அடுத்து பொட்டனேரி 4 ரோடு அருகே சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த தமிழரசி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய புகழொளியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவரும் இறந்து விட்டார். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், தாய், மகன் இருவரின் உடல்களையும் மேச்சேரி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.