கோவை லாட்ஜில் கேரள வாலிபர் தற்கொலை

1100பார்த்தது
கோவை லாட்ஜில் கேரள வாலிபர் தற்கொலை
கேரள மாநிலம் திருச்சூர் கண்ணம்புலிபுரத்தை சேர்ந்தவர் சுதீஷ்(33). டிரைவர். கடந்த மாதம் சுதீஷ் தனது மனைவியிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு கோவை வந்தார். பின்னர் கடந்த 8ம் தேதி உக்கடம் என்எச் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் சுதீஷ் அறை எடுத்து தங்கினார். அப்போது தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்ட சுதீஷ் தான், ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். மேலும் கோவையில் அவர் தங்கியிருக்கும் இடத்தையும் கூறினார்.

இதனையடுத்து அவரது மனைவி ஒலினா நேற்று கோவை வந்தார். கணவர் தங்கியிருக்கும் லாட்ஜூக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு அவருடன் வேறு ஒரு பெண்ணும் இருந்ததாக தெரிகிறது. இதனால் சுதீசுக்கும், ஒலினாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே சுதீசுடன் தங்கியிருந்த பெண் அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து ஒலினாவும், லாட்ஜில் இருந்து வெளியேறினார். இதனால் மனவேதனை அடைந்த சுதீஷ் லாட்ஜில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி