
திருவொற்றியூர்: சிறுமி ஒரே நாளில் மீட்பு
திருவொற்றியூரைச் சேர்ந்த, 14 வயது சிறுமி, தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். தாயார் திட்டியதால், 10ம் தேதி, திடீரென மாயமானார். திருவொற்றியூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சக்திவேல் உத்தரவுப்படி, மாயமான சிறுமியை மீட்க, தனிப்படை அமைக்கப்பட்டது. சிறுமி பஸ்சில் செல்லும்போது, உடன் படிக்கும் தோழிக்கு போன் பேசியுள்ளார். இதையறிந்த, தனிப்படை போலீசார், சிறுமி பேசிய மொபைல் போன் எண்ணை ஆய்வு செய்தபோது, மருத்துவ மாணவி ஒருவரின் மொபைல் போன் என்பது தெரியவந்தது. உடனடியாக அந்த மருத்துவ மாணவியிடம், திருவொற்றியூர் சிறுமி மாயமான சம்பவம் குறித்து விளக்கி, அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படியும், பேருந்து மதுரை வரும்போது இறக்கிவிடும்படியும் கூறியுள்ளனர். இதுகுறித்து, பேருந்து ஓட்டுனருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மதுரை, ஒத்தகடையில் தயாராக இருந்த போலீசார், பஸ்சில் வந்த சிறுமியை மீட்டு, சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.