
சென்னை: ரமலான் நோன்பு கஞ்சி: 7, 920 மெட்ரிக் டன் அரிசி வழங்க உத்தரவு
ரமலான் நோன்பு கஞ்சி தயாரிப்புக்காக பள்ளிவாசல்களுக்கு 7,920 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பில், "ஒவ்வொரு ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரித்து வழங்கும் பொருட்டு, பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி, தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2025-ஆம் ஆண்டிலும் இரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. 2025-ஆம் ஆண்டு இரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 7,920 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 18 கோடியே 41 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.