திருமுருகன்பூண்டி: விபத்தில் தையல் தொழிலாளி பலி

1084பார்த்தது
திருமுருகன்பூண்டி: விபத்தில் தையல் தொழிலாளி பலி
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 43). தையல் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு திருப்பூரில் இருந்து அவினாசி நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அம்மாபாளையத்தை கடந்து சென்றபோது ஒரு பெண் திடீரென சாலையை கடக்க முயன்றுள்ளார். அந்தப் பெண்மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை வலதுபுறமாக திருப்பி உள்ளார்.

அப்போது சாலையின் மையப்பகுதியில் இருந்த தடுப்புச் சுவர் மீது மோதி அண்ணாமலை கீழே விழுந்தார். இதற்கிடையில் அந்த வழியாக வந்த வாகனம் அண்ணாமலை மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.