பட்டுக்கோட்டை வட்டாரத்தில், வேளாண்மை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ், ஏனாதி கிராமத்தில் ஒருங்கிணைந்த நிலக்கடலை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது
ஊராட்சி மன்ற தலைவர் தீபிகா சுதாகர் தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் அப்சரா வரவேற்றார். அதனை தொடர்ந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும், பட்டுக்கோட்டை வேளாண் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர்
(பயிர் பெருக்கம் மற்றும் மரபியல்) சித்ரா பேசுகையில், நிலக்கடலையில் உயர் விளைச்சல் தரும் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். பருவத்திற்கு ஏற்றார் போல் ரகங்களை சாகுபடி செய்ய வேண்டும். விதைகளை விதை நேர்த்தி செய்து விதைப்பதால், விதையின் மூலம் பரவக்கூடிய நோய்களை கட்டுப்படுத்தலாம்.
தொழு உரம் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். கடலையில் ஜிப்சம் இடுவதினால் அடர்த்தியான செடிகள், திரட்சியான கடலையும், நல்ல மகசூலும் கிடைக்கும்" என்றார்.
பின்னர் விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் நிலக்கடலை சாகுபடி பற்றிய பல்வேறு சந்தேகங்களை இணைப் பேராசிரியரிடம் கேட்டறிந்தனர். இதில் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். நிறைவாக வேளாண்மை அலுவலர் சன்மதி நன்றி கூறினார்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சரவணன், அட்மா திட்ட அலுவலர்கள் முருகானந்தம், ரமேஷ், அமிர்த லீலியா அகியோர் செய்திருந்தனர்.