சேலம், ஆத்துார் அடுத்த, ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில், வரும், 30ல், சூரசம்ஹார விழா கொண்டாடப்படுகிறது என, கோவில் நிர்வாக குழு தலைவர் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில், உலகிலேயே உயரமான, 146 அடி உயர முருகன் சிலை உள்ளது.
இக்கோவிலில் வளர்பிறை சஷ்டி, கிருத்திகை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. வரும், 30ல், முதலாமாண்டு சூரசம்ஹாரம் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல், இதற்கான விழா துவங்குகிறது. வரும், 30ல், மாலை, 4: 00 மணியளவில், சூரனை, முருகன் வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடத்தப்படுகிறது. மறுநாள், 31 மாலை, 5: 00 மணிக்கு தெய்வானையுடன் முருகனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து, தங்கத்தேரில் சுவாமி கோவிலை சுற்றி சிறப்பு ஊர்வலம் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.