அறிவியல் பரிசோதனை நிபுணர்களை உடனே நியமிக்க உத்தரவு

84பார்த்தது
அறிவியல் பரிசோதனை நிபுணர்களை உடனே நியமிக்க உத்தரவு
சிறுமி பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைதான ராமநாதபுரம் திருவாடனையை சேர்ந்த கவின் என்பவர் ஜாமீன் வழங்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (செப்.,21) விசாரணைக்கு வந்தது.

குற்றவாளிகளிடம் கைப்பற்றிய மொபைல்களில் பல்லாயிரக்கணக்கான வீடியோ, புகைப்படங்களை பார்த்து நீதிபதி அதிர்ச்சி அடைந்தார். மேலும் இவ்வளவு வீடியோ, புகைப்படங்களில் பாதிக்கப்பட்ட சிறுமி புகைப்படம் உள்ளதா என கண்டறிந்து அறிக்கை தர தாமதம் ஏன்?

இந்த வழக்கு மட்டுமின்றி பல வழக்குகளில் தடயவியல் அறிக்கை தாமதமாக தருவதற்கு காரணம் என்ன? என கேள்வி எழுப்பினார். தனக்கு கீழ் அதிகாரிகள் குறைவாக உள்ளதாக தடயவியல் துறை மதுரை மண்டல இணை இயக்குநர் ஆஜராகி பதிலளித்தார். தனக்கு கீழ் 1 உதவி இயக்குநர், 2 பரிசோதனை அலுவலர்கள், 2 இளநிலை பரிசோதனை அலுவலர்கள் மட்டுமே உள்ளனர் என இணை இயக்குநர் விளக்கம் அளித்தார்.

இதனை தொடர்ந்து ஒவ்வொரு வழக்கிலும் தடயவியல் அறிக்கை வர தாமதமானால் வழக்கின் விசாரணை பாதிக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள், மதுரை மண்டலத்திற்கு தேவையான அறிவியல் பரிசோதனை நிபுணர்களை உள்துறைச் செயலாளர் உடனே நியமிக்க வேண்டும். குற்ற வழக்குகளில் புலனாய்வுத் தன்மையை அதிகரிக்க தேவையான கூடுதல் பதவிகளையும் உருவாக்க வேண்டும் என மதுரை மண்டல தடயவியல் ஆய்வகத்தில் அலுவலர் பணியிடங்களை உடனே நிரப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.