நெரூர் தென்பாகம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை

2544பார்த்தது
கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெரூர் தென்பாகம் ஊராட்சி அலுவலகமானது ரங்கநாதன்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் 150க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்த பணித்தள பொறுப்பாளர் மருத்துவ காரணங்களுக்காக, விடுமுறையில் சென்றுள்ளார். இந்த நிலையில் பணியாளர்களின் வருகை பதிவேடு கையேட்டை பணித்தள பொறுப்பாளர் இல்லாத நபரை வைத்து வாங்குவதாக புகார் கூறப்படுகிறது. வருகை பதிவேட்டை கொடுக்க விரும்பாத பணியாளர்களிடம் இருந்து, ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் பதிவேடுகளை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். கோபமடைந்த பணியாளர்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு குவிந்து, அந்த அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி நேரில் அலுவலகத்திற்கு வந்து பணியாளர்களிடம் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தினர். தற்காலிகமாக பணித்தள பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நபரிடம் வருகை பதிவேட்டை ஒப்படைத்தனர். மேலும், விடுமுறையில் சென்ற பணித்தள பொறுப்பாளரை மாற்றி விட்டு, ஏற்கனவே முறைகேட்டில் ஈடுபட்ட பணித்தள பொறுப்பாளரை மீண்டும் நியமிப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது இதனை கண்டித்தும் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் அமைதிப் பேச்சுவார்த்தையை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.