கருங்கல் அருகே முந்திரி கடத்தல்; மேலாளர், டிரைவர் கைது

54பார்த்தது
கருங்கல் அருகே முந்திரி கடத்தல்; மேலாளர், டிரைவர் கைது
கருங்கல் அருகே  மூசாரி என்ற பகுதியில் முந்திரி தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதை  திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ஜீபின்சன் என்ற பினு(42) என்பவர்  நடத்தி வருகிறார். இங்கு மேலாளராக கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் (50) என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக இந்த ஆலையில் இருந்த முந்திரி இருப்பு குறைந்து வந்துள்ளது.

       இந்த நிலையில் நேற்று அதங்கோடு பகுதியில் உள்ள முந்திரி ஆலைக்கு ஒருவர் முந்திரி கொண்டு சென்றுள்ளார். அதுபற்றி விசாரித்த போது அதனை மூசாரி பகுதியில் உள்ள ஆலையிலிருந்து கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. இது பற்றி ஜீபின்சனுக்கு தகவல் கிடைத்தது. அவர் கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கருங்கல் போலீசார் விசாரணை நடத்தினர்.

       இதில் முந்திரியை கொண்டு சென்றவர் குஞ்சாக்கோடு பகுதியை சேர்ந்த வின்சென்ட் (38) என்பதும், அவர் கருங்கல் முந்திரியாலையின் டிரைவர் எனவும் தெரிய வந்தது. வின்சென்ட் அந்த ஆலையின் மேலாளர் ஜெயச்சந்திரனுடன்  கூட்டு சேர்ந்து முந்திரி கடத்தலில் ஈடுபட்டதாக தெரிய வந்தது.

     இதனை தொடர்ந்து ரெண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இதுவரை எவ்வளவு முந்திரி கடத்தினர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.