தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்க சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 70 சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளிடம் கட்டண வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதில் பல்வேறு சுங்க சாவடிகள் அதன் தவணை காலாவதி ஆன பின்பு கூட தொடர்ந்து செயல்பாட்டில் இருந்து வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு பரனூர் சுங்க சாவடி கடந்த 2019 ஆம் ஆண்டு காலாவதியான நிலையில் தற்போது வரை கட்டண வசூலை தொடர்ந்து செய்து வருகின்றன.
மேலும் இதுபோன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் காலாவதியான சுங்க சாவடிகள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் செங்கல்பட்டு அருகே சுங்க சாவடி முற்றுகையிடும் போராட்டம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாருல்லா தலைமையில் நடைபெற்றது.
அப்பொழுது திடீரென மனிதநேய மக்கள் கட்சியினர் சிலர் சுங்க சாவடி வழியாக செல்லும் வாகனங்களை தடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கிருந்த காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை தடுக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில் மக்கள் நேய மனித கட்சி நிர்வாகிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் சுங்க சாவடி பூத் கண்ணாடிகளை கட்சி நிர்வாகிகள் சரமாரியாக அடித்து உடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.