ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து

57பார்த்தது
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன கேபின் குழு ஊழியர்கள், இரண்டாவது நாளாக இன்றும், திடீர் விடுப்பு எடுக்கும் போராட்டங்களில் ஈடுபட்டதால், சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர், கொல்கத்தா, திருவனந்தபுரம் உள்ளிட்ட 8 விமானங்கள், இன்று ரத்து செய்யப்பட்டு, பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தோடு இணைந்தது, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம். ஆனால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றும் கேபின் குழு ஊழியர்களுக்கும், ஏர் இந்தியா நிர்வாகத்துக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து செவ்வாய் நள்ளிரவு வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து புதன்கிழமை அதிகாலை திருவனந்தபுரம் புறப்பட்டு செல்லும் இரண்டு விமானங்கள், சென்னை விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டன. மற்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

ஆனால் இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாக, சென்னை விமான நிலையத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் கேபின் குழு ஊழியர்கள் பலர் திடீர் விடுப்பு எடுத்து விட்டு பணிக்கு வராத காரணத்தால், விமானங்களை இயக்க விமானிகள் பொறியாளர்கள் இல்லாமல், இன்று மொத்தம் 8 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள், ரத்து செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி