
சென்னை: நில அபகரிப்பு: திமுக முன்னாள் அமைச்சரின் மனைவி மனு தள்ளுபடி
தன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் மனைவி அஜிதா தாக்கல் செய்திருந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திமுக முன்னாள் அமைச்சரான மனோ தங்கராஜின் மனைவி அஜிதா, மாவட்ட ஊராட்சித் தலைவராக பதவி வகித்த இவர் நாகர்கோவிலைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான தயா பாக்யசிங் என்பவருக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலமாக சரவண பிரசாத் என்பவருக்கு விற்றதாகக் கூறி குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நாகர்கோவில் குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் மனைவி அஜிதா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அஜிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. கே. இளந்திரையன், மனுதாரரான அஜிதாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.