திருச்சி திருவானைக்கோவிலில் பன்னிரு திருமுறை வார வழிபாட்டு கழகத்தின் 55ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் திருமுறை விழா 2 நாள்கள் நடைபெற்றது. 2ஆம் நாளான நேற்று (மே 27) காலை திருமுறைகள் ஓதி திருநீற்றான் மதில் (5ஆம் பிரகாரம்) வலம் வந்தனர். அதனைத் தொடர்ந்து 63 நாயன்மார்களுக்கு (உத்ஸவர் சிலைகள்) திருமஞ்சனம் வழிபாடு நடந்தது.
பின்னர் கூட்டு வழிபாடும், மாஹேஸ்வர பூஜையும், சேக்கிழார் திருக்கூடம் சிவ.இராகவனின் சொற்பொழிவும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் 63 நாயன்மார்கள் எழுந்தருளச் செய்யப்பட்டு கைலாய வாத்தியத்துடன், வான வேடிக்கையுடன் நான்காம் பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்தனர். இதில் ஏராளமான சிவபக்தர்கள் கலந்து கொண்டு திருமுறை பாடியவாறு உடன் வந்தனர்.