கை நரம்புகளை வைத்தே அடையாளம் காணும் புதிய தொழில்நுட்பம்

3511பார்த்தது
கை நரம்புகளை வைத்தே அடையாளம் காணும் புதிய தொழில்நுட்பம்
இனி உங்கள் கை நரம்புகள்மூலம் உங்களை அடையாளம் காணும் முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான தொழில்நுட்பத்தையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பயோமெட்ரிக் மூலம் அடையாளம் காணும் முறை சமீபத்திய ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் அதிகம் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாக இருக்கிறது. விமான நிலைய செக்-இன் லைன்களிலிருந்து போலீஸ் நிலையங்கள்,அலுவலகங்கள், வங்கிகள், லாக்கர், பெரிய தொழில் நிறுவனங்கள் என எல்லா இடங்களிலும் பயோமெட்ரிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் கருவிழி, கைரேகை மற்றும் குரல் அங்கீகாரம் ஆகியவை பல்வேறு துறைகளில் பாதுகாப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

என்னதான் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகப் பயோமெட்ரிக் முறை கொண்டுவரப்பட்டாலும், அதிலும் அதிக அளவில் மோசடிகள் நடப்பது வழக்கம். அந்த வகையில், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சில பயோமெட்ரிக் முறைகளில் நன்கு அறியப்பட்ட பலவீனங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். போலி கைரேகை ஒன்றை உருவாக்க ஒருவர் தொட்ட மேற்பரப்பிலிருந்து கைரேகைகள் சேகரிக்கப்படலாம். இதையடுத்து, சமூக ஊடகங்களிலிருந்து பெறப்பட்ட படங்களைப் பயன்படுத்தி முக அடையாள தொழில்நுட்பத்தில் மோசடி செய்ய முடியும். மேலும் கருவிழி அடிப்படையிலான வழிமுறைகளைக் குழப்புவதற்கு காண்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்தப்படலாம் என்று நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பள்ளி ஆராய்ச்சியாளர் சையத் ஷா கூறியுள்ளார்.

ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கை நரம்புகளைக் கொண்டு அடையாளம் காணும் தொழில்நுட்பம், மற்ற பயோமெட்ரிக் போல அல்லாமல் சற்று வித்தியாசமாக இருக்கும். மேலும், சிறந்த பாதுகாப்பு தொழில்நுட்பமாகக் கருதப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சையத் ஷா, "நரம்பு வடிவங்கள் தோலுக்கு அடியில் கிடக்கின்றன. இதனால் கைரேகைகளை நகல் எடுப்பது, முக அடையாளத்திற்காகச் சமூக ஊடகங்களில் புகைப்படங்களைத் திருடுவது, காண்டாக்ட் லென்ஸ் மூலம் கருவிழிகளை மாற்றியமைப்பது போன்ற மோசடிகளில் ஈடுபட முடியாது. ஒரு நரம்பு அடிப்படையிலான அணுகுமுறைக்கு மாற்றாக ஒரு போலி நரம்புகளை உருவாக்குவது என்பது மிகவும் கடினமாக இருக்கும்" என அவர் கூறியுள்ளார்.

இந்தக் கண்டுபிடிப்புக்காக இன்டெல் ரியல்சென்ஸ் டி 415 டெப்த் கேமரா அதாவது ஆஃப்-தி-ஷெல்ஃப் டெப்த் தொழில்நுட்பம் கொண்ட கேமராவைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட 35 நபர்களிடமிருந்து சுமார் 17,500 படங்களை ஆராய்ச்சியாளர்கள் எடுத்தனர். ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களின் கைகளை இறுக்கமாக மூடி வைத்திருக்கும்படி செய்து, பின்னர் அவர்கள் கைகளில் தோன்றும் நரம்பு வடிவங்களைக் கைப்பற்றினர்.

இதையடுத்து செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் இந்த வடிவங்களிலிருந்து "வேறுபட்டுக் காணப்படும் அம்சங்களை" பிரித்தெடுத்தனர். இவை ஆராய்ச்சியில் பங்கேற்ற 35 நபர்களைக் கொண்ட குழுவிலிருந்து 99% க்கும் அதிகமான துல்லியத்துடன் ஒரு நபரை அடையாளம் காண பயன்படும் என்று ஆராய்ச்சியாளர் கூறுகிறார்கள்.

"விசேஷமாக, நரம்புகளை மட்டும் பிரித்தெடுப்பதற்கு கைகளை இறுக்கமாக மூட வேண்டும் என்பதால் மோசடி செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் பிறரின் நரம்பு வடிவங்களை விரைவாகப் பெறுவது கடினம்" என்று ஆராய்ச்சியாளர் ஷா விளக்கியுள்ளார். மக்களை அடையாளம் காண நரம்புகளைப் பயன்படுத்துவதற்கான யோசனை புதியதல்ல என்றாலும், அதற்கு வழக்கமாகச் சிறப்புத் தொழில்நுட்பம் தேவைப்படுகிறது.

ஆனால், இந்த ஆராய்ச்சியாளர்கள் ஆஃப்-தி-ஷெல்ஃப் 3D கேமராக்களைப் பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளனர். IET Biometrics -ல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்தக் குழு வெளியிடப்பட்ட ஆய்வின்படி, மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்கள் போன்ற தனிப்பட்ட சாதனங்களில் தனிநபர்களை அங்கீகரிப்பதற்கு இந்த நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.