சேலம் இரும்பாலை அருகே காமராஜர் நகரில் 400-க்கும் மேற்பட்ட பல்வேறு சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் நேற்று தாங்கள் வசிக்கும் பகுதியில் திடீரென பட்டா கேட்டு போராட்டம் நடத்தினர். அப்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து அது தொடர்பான அறிவிப்பு பதாகையும் அவர்கள் கையில் பிடித்தவாறு போராட்டம் நடத்தினர்.
இதனை அறிந்த சேலம் மேற்கு தாசில்தார் மாதேஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் வந்து உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
தேர்தல் புறக்கணிப்பு
இந்த போராட்டம் குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: -
சேலம் உருக்காலை திட்டத்திற்காக கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் நிலம் கையகப்படுத்தப்பட்டதால் எங்களுக்கு மாற்று இடமாக வட்டமுத்தாம்பட்டி காமராஜர் நகரில் இடம் வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை கொடுக்கப்பட்ட இடத்திற்கு பட்டா வழங்கப்படவில்லை.
இது குறித்து பல முறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இந்த முறை எங்களின் இறுதி முடிவான ஜனநாயக உரிமை செலுத்துவதை தவிர்த்து நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்