லிப்ட் கோளாறால் ஒருவர் உயிரிழப்பு - அண்ணாமலை இரங்கல்

85பார்த்தது
லிப்ட் கோளாறால் ஒருவர் உயிரிழப்பு - அண்ணாமலை இரங்கல்
சென்னை புளியந்தோப்பு KP பார்க் அடுக்குமாடி குடியிருப்பில், லிப்ட் கோளாறு காரணமாக, 7 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து, கணேசன் என்ற 52 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்ததற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில், ஏழை எளிய மக்களுக்காகக் கட்டப்பட்ட இந்த KP பார்க் அடுக்குமாடி குடியிருப்பு, தரமற்ற முறையில் கட்டப்பட்ட விவரங்கள், ஐஐடி ஆய்வுக் குழு அறிக்கையின் மூலம் தெரிய வந்தது. இதனை அடுத்து, இந்தக் குடியிருப்பைக் கட்டிய பிஎஸ்டி எஞ்சினியரிங் நிறுவனம், அரசுப் பணிகளில் பங்கேற்க முடியாதவாறு, கருப்புப் பட்டியலில் வைக்கப்படும் என்று திமுக அரசு கூறியது. தரமற்ற குடியிருப்புகளைக் கட்டிய பிஎஸ்டி நிறுவனம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏழை எளிய மக்களின் உயிர் என்றால் திமுகவுக்கு அத்தனை இளக்காரமாகி விட்டதா? உடனடியாக, இந்தக் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், தரமற்ற கட்டிடங்கள் கட்டி வரும் பிஎஸ்டி நிறுவனம் மீதும், மீண்டும் மீண்டும் அரசுப் பணிகளை இந்த நிறுவனத்துக்கு வழங்கி வரும் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி