பேருந்து மோதி வட மாநில இளைஞர் உயிரிழப்பு.

64பார்த்தது
சேலத்தில் இருந்து ஈரோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை, மகுடஞ்சாவடியை சேர்ந்த சக்திவேல் என்பவர் இயக்கியுள்ளார். பள்ளிபாளையம் அருகே உள்ள வெடியரசம்பாளையம் என்ற பகுதி அருகே வந்த பொழுது, எதிர்பாராத விதமாக சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகன ஓட்டியின் மீது தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயங்களுடன் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது விபத்தில் இறந்து போன நபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹிமாஞ்சுல் சாஹூ என்பதும் அவர் பள்ளிபாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் தொழிலாளியாக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. அடிக்கடி இந்த சாலையில் விபத்துகள் ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க வேண்டும் அல்லது பேரி கார்டு அமைக்க வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் பள்ளிபாளையம் சேலம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து உடனடியாக மற்றொரு பகுதியில் இருந்த பேரி கார்டுகளை போலீசார் உதவியுடன் பொதுமக்கள் எடுத்து வந்து விபத்து அதிகம் நடக்கும் சாலையில் வைத்தனர்.

டேக்ஸ் :