திருவண்ணாமலை: மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் நீதிபதி ஆய்வு

57பார்த்தது
திருவண்ணாமலை: மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் நீதிபதி ஆய்வு
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி எம். கோவிந்தராஜ் தலைமையிலான குழு திருவண்ணாமலைக்கு வந்தது. முதல்கட்டமாக, அண்மையில் மகா தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் இறந்த இடத்தை இந்தக் குழு பார்வையிட்டு ஆய்வு செய்தது. மலையின் ஒரு பகுதியான வ.உ.சி. நகர், 11-ஆவது தெருவில் மண் சரிவு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து குழுவினருக்கு மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் விளக்கம் அளித்தார். 

பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய், காவல் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம். கோவிந்தராஜ் திருவண்ணாமலை மலையில் உள்ள மொத்த ஆக்கிரமிப்பு வீடுகள், மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் உள்ள அபாயகரமான வீடுகளின் எண்ணிக்கை, கிரிவலப் பாதையில் உள்ள குளங்களின் ஆக்கிரமிப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. இராம்பிரதீபன், வருவாய்க் கோட்டாட்சியர் ஆர். மந்தாகினி, வழக்குரைஞரும் சமூக ஆர்வலருமான யானை ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி