சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட மற்ற துறை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குடும்பத்துடன் வசிக்க மருதுபாண்டியர் நகர், 48 காலனியில் 1986, 1991ல் இரண்டு கட்டமாக வீட்டு வசதி வாரியம் சார்பில் 798 வீடுகள் கட்டப்பட்டது. ஏ முதல் இ பிளாக் வரையிலான பிரிவுகளில் வசிக்கும் ஊழியர்களிடம் அவர்களது அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் என்ற கணக்கில், ரூ. 650 முதல் ரூ. 3, 500 வரை மாத வாடகை வசூலித்தனர்.
இந்த வீடுகள் அனைத்தும் பராமரிப்பின்றி, கூரை, ஜன்னல், சுற்றுச்சுவர்கள் சேதமுற்றுள்ளன. இந்த வீடுகளில் குடியேற ஊழியர்கள் அச்சம் அடைகின்றனர். ஆண்டாண்டு காலமாக சேதமான வீடுகள் பூட்டியே கிடப்பதால், விஷ ஜந்துக்களின் கூடாரமாகி விட்டது. அரசு விதிப்படி, வீட்டு வசதி வாரியம் கட்டிய வீடுகள் 30 ஆண்டுகளை கடந்துவிட்டது. இதில் ஒரு சில ஊழியர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டு வாடகைக்கு இருந்து வருகின்றனர். சேதம் அடைந்துள்ள அரசு குடியிருப்பு வீடுகளை பராமரிக்க வேண்டும். பாழடைந்து ஊழியர்கள் குடியிருக்காமல் உள்ள வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும். அதேபோல் ஏற்கனவே அப்புறப்படுத்திய டி. இ பிளாக் குடியிருப்புகளை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.