நவராத்திரி விழா தொடங்கியதையொட்டி கோயில் மற்றும் வீடுகளில் கொலு பொம்மைகளை வைத்து பக்தர்கள் வழிபட்டனர். மகாளய அமாவாசைக்கு அடுத்த நாள் புரட்டாசி மாதத்தின் வளர்பிறையில் பிரதமை திதியில் நவராத்திரி தொடங்கி ஒன்பது நாட்களில் நிறைவு பெறுகிறது.
தமிழகத்தில் நவராத்திரி விழாவை துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளுக்கு அர்ப்பணிக்கிறார்கள். அதாவது முதல் மூன்று நாள் துர்காவையும் அடுத்த மூன்று நாள் லட்சுமியையும், கடைசி மூன்று நாள் சரஸ்வதி தேவியையும் பூஜை செய்து வழிபடுகிறார்கள்.
நவராத்திரியின் 8வது நாள் தினசரி வாழ்வில் பயன்படும் கருவிகளுக்கு ஆயுத பூஜையாகவும் 9வது நாள் பண்டிகையின் நிறைவு நாளன்று கல்வி, கலைகளின் வடிவான சரஸ்வதி பூஜையாகவும், கொண்டாடப்படுகிறது.
சேலத்தில் பல கோயில்கள் மற்றும் வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.
இந்த கொலு படிக்கட்டுகளின் மேல் படியில் கடவுள் உருவங்கள், அதற்கு அடுத்த படியில் ஞானிகள், மகான்கள், அடுத்தடுத்த படியில் விலங்குகள், தாவரங்கள் வைத்து வழிபட்டனர். இந்த பூஜை மாலை நேரத்தில் துவங்கி இரவு வரை இந்த வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து 11ம் தேதி ஆயுதபூஜையும், 12ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது.