சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட துட்டம்பட்டி வணிச்சம்பட்டி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் பிரான்சிஸ் ஜெரால்டு. இவர் ஆரியாம்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆசிரியரின் இடமாற்றத்தை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று (நவம்பர் 28) பள்ளி முன்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டார கல்வி அலுவலர்கள் அமலா, வாசுகி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் லட்சுமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் ஆகியோர் மாணவர்கள், பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஆங்கில ஆசிரியர் பிரான்சிஸ் ஜெரால்டு மீண்டும் அதே பள்ளியில் பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர்.