சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஆவடியூர் பகுதியை சேர்ந்தவர் அர்த்தனாரி (வயது 61). இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் அர்த்தனாரியை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் போலீசார் சார்பில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று நீதிபதி தீர்ப்பு கூறினர்.
இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக அர்த்தனாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 1, 000 அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார்.