ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் மரக்கன்றுகள் கருகி வீணாகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் கண்காணித்து முறையாக வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பரமக்குடியில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம், சாலையோர மரம் வளர்ப்பு, கிராமப்புறங்களில் பசுமை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரம் வளர்ப்பு திட்டம், கருணாநிதியின் நினைவு தின மரக்கன்று நடும் திட்டம் என ஒவ்வொரு நிலையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பரமக்குடி ஊராட்சி உரப்புளி, வேந்தோணி பகுதிகளில் மரக்கன்றுகள் உருவாக்கப்படுகிறது. மேலும் பள்ளிகளில் பசுமை திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து மாணவர்களும் மரக்கன்றுகளை பள்ளிகளுக்கு வழங்கி உள்ளனர்.
இது போன்ற மரக்கன்றுகள் தற்போது நட்டு வைக்கப்படாமல் வீணாகும் சூழல் அதிகரித்துள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலை ஓரங்கள் உட்பட குறுங்காடுகள் திட்டம் வரை புதிதாக செயல்படுத்தப்படாமல் இருக்கிறது. தொடர்ந்து மரக்கன்றுகளை பராமரிக்க போதிய நிதி தேவை என்பதால் ஊராட்சிகளிலும் திட்டம் கிடப்பில் விடப்பட்டுள்ளது.