காஞ்சிபுரம் அருகேயுள்ள வையாவூர், ஏனாத்துார் ஆகிய கிராமங்களில், நேற்றுமுன்தினம், இரவு 8: 30 மணியளவில் மின்தடை ஏற்பட்டது. இரவு 10: 30 மணி வரை மின்சாரம் வராததால், அதிருப்தியடைந்த கிராமத்தினர், அருகேயுள்ள நல்லுார் கிராமத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை, 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு, அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
மின்மாற்றி பழுது காரணமாக மின்தடை ஏற்பட்டிருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீர்வள்ளூர் கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின் சப்ளையை மாற்றி தருவதாக அதிகாரிகள் தெரிவித்த போதும், நள்ளிரவு வரை மின் இணைப்பு கிடைக்காமல் இருந்துள்ளது.
இதனால், அதிருப்தியடைந்த கிராமத்தினர், தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்ய தயாராகினர். தகவலறிந்த துணை காவல் கண்காணிப்பாளர் மணிமேகலை, சம்பவ இடத்திற்கு சென்று, கிராம மக்களுடன் பேச்சு நடத்தி, சமாதானம் செய்தார்.
நள்ளிரவு 1: 00 மணியளவில் மீண்டும் மின் இணைப்பு கிடைத்த பின், கிராமத்தினர் சமாதானமாகி வீடு திரும்பினர்.