காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், நகர பேருந்துகளுக்கான நேர காப்பாளர் அறை அருகில், காஞ்சிபுரம் தி. மு. க. , எம். எல். ஏ. , எழிலரசன், ஒதுக்கீடு செய்த, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 7 லட்சம் ரூபாய் செலவில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் கட்டப்பட்டு, 2018ல் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
மாநகராட்சி நிர்வாகம் பராமரப்பில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட மையத்தின் குடிநீரை, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பயணியர், நடைபாதை வியாபாரிகள், போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், குடிநீர் தொட்டியில் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ள பகுதியில் உள்ள கான்கிரீட் சிறு தடுப்பு சுவரில், விரிசல் ஏற்பட்டு ஊசலாடும் நிலையில் உள்ளது.
பொதுமக்கள், குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடிக்கும்போது, கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ள தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, குடிநீர் சுத்திகரிப்பு வழங்கும் மையத்தில் சேதமடைந்த நிலையில் சிறு தடுப்புச் சுவரை சீரமைக்க, மாநகாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.