செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த வாணியஞ்சாவடி பகுதியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலை வளாகத்தில், இரண்டு நாட்கள் நடைபெறும் மீன்வள தொழில் நிறுவன மாநாடு, நேற்று (செப் 28) துவங்கியது.
விழாவில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் கஜலட்சுமி தலைமை வகித்து, துவக்கி வைத்தார். அதேபோல், மீன் உற்பத்தி மற்றும் அதற்கான இடுபொருள் தயாரிக்கும் புகைப்படக் காண்காட்சியையும் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, ஆராய்ச்சி மேற்கொள்ளுதல் மற்றும் மாணவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குதல் தொடர்பாக, இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
இம்மாநாட்டில், இந்தியா முழுதும் உள்ள மீன் வளம் சார்ந்த தொழில்களை மேற்கொண்டுவரும் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், இயக்குனர்கள், மேலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.