காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரியில், போதைப் பொருட்கள் உபயோகிப்போர் இல்லாத ஊராட்சி உருவாக்கும் விழிப்புணர்வு முகாம் நேற்று (செப் 28) நடந்தது.
பொது சுகாதாரத் துறை மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில், பழவேரி கிராமத்தினர் மற்றும் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். மாவட்ட புகையிலை தடுப்பு ஆலோசகர் ஸ்ரீராம், மாவட்ட சுகாதார அலுவலர் சரபோஜி மற்றும் மக்கள் நல கல்வியாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்று போதைப் பொருட்களால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து விளக்கினர்.
போதை பொருட்களான மதுபானம், அபின், கஞ்சா, பான்மசாலா, ஹரோயின் போன்றவையால் உடல், மன ரீதியாக ஏற்படும் கேடுகள், மனிதர்களின் உடல் உறுப்புகளுக்கான பாதிப்புகள் மற்றும் போதையால் ஏற்படும் சமூக சீர்கேடுகள் குறித்து விளக்கினர். நிகழ்ச்சியில், பழவேரி ஊராட்சித் தலைவர் பாஸ்கரன் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் நிர்வாகிகள் பிரியா, மோசஸ், கீதா ஆகியோர் பங்கேற்றனர்.