செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜிடம், மதுராந்தகம் அ. தி. மு. க. , - எம். எல். ஏ. மரகதம், அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டடம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, நேற்று அளித்தார்.
அதன் விபரம் வருமாறு:
மதுராந்தகம் தாலுகாவில் உள்ள சிதண்டி ஊராட்சியில், அரசு உயர் நிலைப் பள்ளிக்கு கூடுதலாக நான்கு வகுப்பறைகள், சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும். சாலையில் இருந்து பள்ளிக்கு செல்லும் வரை, கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும்.
அச்சிறுபாக்கம் அடுத்த களத்துார் ஊராட்சியில், ஒரே கட்டடத்தில் 70 மாணவர்கள் இட நெருக்கடியில் படித்து வருகின்றனர். இதனால், கூடுதலாக மூன்று வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும். கீழ்வசலை கிராமத்தில், துணை நுாலகம், நீலமங்கலம் கிராமத்தில், 30, 000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்துள்ளது. தண்ணீர் பிரச்னை உள்ளதால், 60, 000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும்.
படாளம் ஊராட்சியில், எம். ஜி. ஆர். , நகரில் அங்கன்வாடி கட்டடம், நெற்களம், கான்கிரீட் சாலை, இருளர் காலனி பகுதிக்கு கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும்.
எம். எல். ஏ. , தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில், நல்லுார் ஊராட்சியில் பவுந்தங்கரணை, புக்கத்துறை ஊராட்சியில் கோழித்தண்டலம், கருங்குழி பேரூராட்சியில் 6வது வார்டு ஆகிய பகுதிகளில், ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளன.