ஈரோடு மாநகராட்சி கூட்டரங்கில் இன்று (அக்.1) காலை மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மனிஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் மேயர் திருக்குறள் வாசித்து அதற்கான விளக்கத்தை கூறினார். மேலும் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு மாநகராட்சி கூட்டம் சார்பில் வாழ்த்துக்களை பதிவு செய்து கொண்டனர். பின்னர் 89 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களும் தங்களது வார்டில் உள்ள பிரச்சனை குறித்து விரிவாக பேசினர்.
காங்கிரஸ் உறுப்பினர் சபுராமா சாதிக் பேசும்போது, அப்துல் கனி வணிக வளாகம் கட்டிட அனுமதி பெற்று கட்டி முடிக்கப்பட்டு ஏலம் விடப்பட்ட பிறகு சட்ட விதிகளுக்கு புறம்பாக ஈரோடு மாநகராட்சி ஒப்புதல் இல்லாமல் 6 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் பின் வரிசையில் உள்ள கடைகள் இருப்பது வாடிக்கையாளர்களுக்கு தெரிவதில்லை என்பதினால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது எனவே விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள 6 கடைகளையும் அகற்ற வேண்டும். வாய்க்கால் ரோட்டில் குறுக்கு சாலையில் தார் சாலை அமைக்க ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ வி கே எஸ் இளங்கோவன் நிதியில் ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.