தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே உள்ள ஆலங்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் கவிபாரதி. இவருடைய மனைவி செல்வி. இவர் திருப்பூரில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். கவி பாரதிக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆலங்குட்டைக்கு வந்த செல்வி திடீரென மாயமானார்.
இதனால் சந்தேகம் அடைந்த செல்வியின் குடும்பத்தினர் இது குறித்து கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் கவிபாரதியிடம் விசாரணை நடத்தினர். அப்போது குடும்ப தகராறு காரணமாக செல்வியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி புதைத்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிபாரதியை கைது செய்தனர்.
இந்த வழக்கு வழக்கு தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் கவிபாரதி மீதான கொலை குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து கவி பாரதிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சையத் பர்க்கத்து ல்லா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கல்பனா ஆஜராகி வாதாடினார்.