கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள் ஒருங்கிணைந்து, கோவை டாடாபாத் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமைப் பொறியாளரை நேற்று(அக்.1) சந்தித்தனர். தட்கல் திட்டம் மற்றும் அனைத்து வகை வேளாண் மின் இணைப்பு திட்டங்களிலும் 2 ஆண்டுகளாக காத்திருக்கும் 30, 000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று கோரி 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு அளித்தனர்.
விவசாயிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் தட்கல் திட்டத்தை அறிமுகப்படுத்தி, விவசாயிகளுக்கு 90 நாட்களில் வேளாண் மின் இணைப்புகள் வழங்க வேண்டும் என்று அறிவித்தது. 5 HP-க்கு 2. 5 லட்சம், 7. 5 HP-க்கு 2. 75 லட்சம், 10 HP-க்கு 3 லட்சம், 15 HP-க்கு 4 லட்சம் என கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.
ஆனால், 90 நாட்களில் மின் இணைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடன் வாங்கி 1. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்துள்ளனர் என்றனர். தமிழ்நாடு மின்சார வாரியம் உபகரணங்கள் இல்லை என்று கூறி காலம் தாழ்த்துவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.