வடகிழக்கு பருவமழை துவங்க இருப்பதால், கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள், மாணவ மாணவியருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.
வடகிழக்கு பருவமழை துவங்க இருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மழைகாலத்தில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மாணவர்கள் செய்ய வேண்டியவை உட்பட, வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
பள்ளிகளில் மின் இணைப்புகளை கண்காணிப்பது, வடிகால்களை சுத்தம் செய்வது, திறந்தவெளி கால்வாய்களை துார்வாரி மூடுவது, குழிகளை நிரப்புவது மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மரங்கள் மரக்கிளைகளை வெட்டி அகற்றுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஏரி, ஆறு, குளங்களில் மாணவர்கள் குளிப்பதை தவிர்க்கவும். வெள்ளம் அபாயமுள்ள நீர்நிலைகளுக்கு அருகே, மாணவர்கள் வேடிக்கை பார்க்க அனுமதிக்கக் கூடாது என பெற்றோருக்கு அறிவுறுத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.