கோவை தொப்பம்பட்டியை சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன்(65). இவர் சிறைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு இவரது மனைவி மூலமாக அவரது தோழியான தாரா(60) என்பவரின் அறிமுகம் ஏற்பட்டது. அப்போது தாரா தான் புதியதாக தொழில் நிறுவனம் ஆரம்பிக்க உள்ளதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிகமாக வருமானம் கிடைக்கும் என உன்னி கிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய உன்னி கிருஷ்ணன் வங்கி பரிவர்த்தனை மூலமாக தாராவுக்கு ரூ. 50 லட்சம் அனுப்பினார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும், தொழிலில் லாபத்தை தரவில்லை.
இது குறித்து உன்னி கிருஷ்ணன் கேட்டபோது, அவர் கொடுத்த பணத்தில் ரூ. 15 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்தனர். மீதமுள்ள ரூ. 35 லட்சத்தை கொடுக்கவில்லை. இது குறித்து துடியலூர் போலீஸ் நிலையத்தில் உன்னி கிருஷ்ணன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரித்தனர். அதில், இந்த மோசடிக்கு தாராவின் மகன் கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகியோரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.