கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை (அக்.,2) மாநகராட்சி எல்லைக்குள் இயங்கும் அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நாளில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி இறைச்சி விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும். மேலும், உக்கடம், சக்திரோடு மற்றும் போத்தனூர் பகுதிகளில் உள்ள ஆடு மற்றும் மாடு அறுவைக்கூடங்களும் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படும் கடைகளுக்கு எதிராக மாநகராட்சி சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் எச்சரித்துள்ளார்.
இதில் அபராதம் விதித்தல், முதல் எச்சரிக்கை வழங்குதல் மற்றும் உரிமம் ரத்து செய்தல் ஆகிய நடவடிக்கைகள் அடங்கும். காந்தி ஜெயந்தி தினத்தன்று விலங்குகளை வதை செய்வதற்கும், இறைச்சி விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளதை அடிப்படையாகக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாநகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து இறைச்சி வியாபாரிகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.