ஆதம்பாக்கம், ஆபீஸர் காலனி, முதல் தெருவைச் சேர்ந்தவர் ராஜாராவ், 63; ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி. இவரது மனைவி ரூபாதேவி, 59; ஓய்வு பெற்ற ஆசிரியை. தம்பதி இருவரும் வெளியூர் சென்ற நிலையில், கடந்த 25ம் தேதி இரவு, வீடு திறந்திருப்பதாக, பக்கத்து வீட்டினர் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அவர்கள், வீட்டிற்கு வந்தபோது, முகப்பு கிரில் கேட், முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே, பீரோ லாக்கர் உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த 32 சவரன் நகைகள் மாயமானது தெரிந்தது. இதுகுறித்த ராஜாராவ் புகாரின்படி, ஆதம்பாக்கம் போலீசார், தடயங்களை சேகரித்து விசாரிக்கின்றனர்.
ஆதம்பாக்கத்தில் நடந்த இந்த திருட்டு சம்பவம் போலவே, மடிப்பாக்கம், பாலையா கார்டன், பத்மாவதி தெருவைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரின் வீட்டிலும், கடந்த வாரம் திருட்டு நடந்தது. கிருஷ்ணசாமி வீட்டினர், ஒரு வாரமாக வீட்டில் இல்லை என்பதை அறிந்து, அவரது வீட்டின் கிரில் கேட், முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திருட்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.