மேடவாகக்த்தில் மூடு கால்வாயில் துளையிடும் பணி

77பார்த்தது
மேடவாகக்த்தில் மூடு கால்வாயில் துளையிடும் பணி
மேடவாக்கம், காரணை, பெரும்பாக்கம், நாவலுார் உள்ளிட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், செம்மஞ்சேரி கால்வாய் வழியாக, முட்டுக்காடு கடலில் கலக்கிறது.

ஒவ்வொரு ஏரிகளின் உபரிநீர் வெளியேற உள்ள சிறிய அளவிலான கால்வாய்களை, பெரிய மூடு கால்வாயாக மாற்ற, 165 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியது. இதில், ஒட்டியம்பாக்கம் ஏரி உபரிநீர் வெளியேற, ஒரு 1. 5 கி. மீ. , நீளம், 30 மீட்டர் அகலத்தில், மூடு கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கால்வாய் மேல் பகுதியை நீரோட்டம் பார்த்து சீராக அமைக்காததால், அதன் மீது மழைநீர் நாள்கணக்கில் தேங்கி, வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.


இதையடுத்து, நீர்வளத்துறை, பக்கவாட்டில் வடிகால் கட்டி, சாலையை புதுப்பிக்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு கடிதம் அனுப்பியது.

இந்நிலையில், நீர்வளத்துறையினர், தாழ்வான பகுதியில் தேங்கும் மழைநீர், கால்வாய்க்குள் செல்லும் வகையில் நான்கு இடங்களில் துளையிட்டு உள்ளது. இதனால், பருவமழையின்போது நாள்கணக்கில் மழைநீர் தேங்கி நிற்காது என, அதிகாரிகள் கூறினர்.

தொடர்புடைய செய்தி