கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், போனஸ் சட்டத்தின் கீழ், வரும் தலைமைக் கூட்டுறவு சங்கங்கள், மத்திய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்படக்கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு அச்சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும். உபரி தொகை இல்லாமல் உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
மேலும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத சங்கங்களாக இருப்பினும் நிகர லாபம் ஈட்டும் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். நிகர லாபம் ஈட்டாத தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்கள் இருப்பின் அவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ. 3 ஆயிரமும், தொடக்க சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ. 2, 400 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணை தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி, 43, 683 பணியாளர்களுக்கு ரூ. 44. 42 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது.