மோட்டார் வாகன விதிகளை மீறிய 1 லட்சத்து 82, 375 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய ஆர்டிஓ-வுக்கு பரிந்துரை செய்யப் பட்டிருப்பதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் நடப்பு ஆண்டு ஜூலை மாதம் வரை 10, 066 விபத்து வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இந்த விபத்துக்களில் 10, 536 பேர் உயிரிழந்தனர். கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை 10, 589விபத்துக்களில் 11, 106 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
தமிழக காவல்துறையின் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளின் காரணமாக 5 சதவீத உயிரிழப்புகள் தடுக்கப்பட்டிருக்கிறது. தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக 35 லட்சத்து 78, 763 வழக்குகள், சீட் பெல்ட் அணியாமல் ஓட்டியதாக 3 லட்சத்து 39, 434 வழக்குகள் எனமொத்தம் 39 லட்சத்து 18, 197 வழக்குகள் பதிவாகி உள்ளன.
மேலும், மோட்டார் வாகன சட்டத்தை மீறியதற்காக 35 லட்சத்து 8, 763 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறிய 1 லட்சத்து 82, 375 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு (ஆர்டிஓ) பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. 39, 924 எண்ணிக்கையிலான ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.