புரட்டாசி மாத 2வது வார ஞாயிற்றுக்கிழமையான நேற்று (செப்.,29) காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மீன்பிடிக்க சென்ற 30க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பின. கானாங்கத்த, கிளிச்ச, வவ்வால் உள்ளிட்ட சிறிய மீன்களின் வரத்து அதிகம் இருந்தது. அதேபோல கடந்த சில மாதங்களில் வரத்து குறைவாக இருந்த பெரிய மீன்களின் வரத்தும் நேற்று அதிகரித்து காணப்பட்டது.
வஞ்சிரம் 800 - 1000; பெரிய வெள்ளை வவ்வால் 850 - 1000; சின்ன கறுப்பு வவ்வால் 300 - 400; பெரிய கறுப்பு வவ்வால் 600 - 700; சங்கரா 200 - 250; சீலா 200 - 300; நெத்திலி மீன்கள் 200 - 300 ரூபாய்க்கு விற்கப்பட்டன.
இது குறித்து மீன் வியாபாரி சுரேஷ் கூறுகையில் ''மீன் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது. அதேநேரம் சிறிய மீன்கள் அதிகளவில் தேக்கமடைந்தன. காசிமேடில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை, சைதாப்பேட்டை, வானகரம், பட்டாளம் மீன் மார்க்கெட்டுகளிலும் வழக்கத்திற்கு மாறாக தேக்கமடைந்தது, '' என்றார்.